சீனாவில் தன்னுடன் அதிக நேரம் செலவிடாத தந்தைக்காக மகன் நடத்திய கடத்தல் நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் Shilin கிராமத்தைச் சேர்ந்தவர் Xiao Zheng (13). இவர் தன்னுடைய தந்தைக்கு கைப்பேசியில் தன்னை சிலர் கடத்திவிட்டதாகவும், விரைவில் வந்து தன்னை காப்பாற்றும் படி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை நீ எங்கு இருக்கிறாய், இடத்தை பற்றி கூறு என்று கேள்வி எழுப்பியுள்ளார் . அதன் பின்னர் சிறுவன் தான் தம்முடைய ஊரில் இருப்பதாகவும், ஒரு பழைய வீட்டில் தன்னுடைய கையை கட்டி போட்டு உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அவர், தன் மகனை எதாவது செய்துவிடுவார்கள் என்று பயந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு சிறுவன் மட்டும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளான். அருகில் சென்று பொலிசார் பார்த்த போது அவன் கைப்பேசியை தன் கால்களுக்கு மத்தியில் வைத்துள்ளான்.
அதைத் தொடர்ந்து பொலிசார் அச்சிறுவனிடம் விசாரணை நடத்தும் போது சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதவாது இச்சிறுவனின் தந்தை பல்வேறு காரணங்களுக்காக தன் மகனுடன் அதிக நேரம் செலவிடாமல் இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி சிறுவனை அவர்களுடைய தாத்தா, பாட்டி வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். அவ்வப்போது தன் மகனை பார்த்துச் செல்லும் அவர் குறைந்தது ஒரு மணி நேரம் கூட அவரிடம் இருப்பதில்லையாம். சமீபத்தில் இவர் Xiao Zheng வை பார்க்க வந்துள்ளார்.
அப்போது சிறுவன் அப்பா தன்னிடம் இருங்கள் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவரோ காதில் கேட்காதது போல் வெளியில் சென்றுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த சிறுவன், தந்தையிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த கடத்தல் நாடகத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் பொலிசார் சிறுவனின் தந்தைக்கு அறிவுரை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.