இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து சிரியா கடற்கரையில் ஒரு ஈரானிய எண்ணெய் கப்பல் நெருப்பு கோளமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் பிராந்திய கடற்பகுதியில் வைத்து குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் எண்ணெய் கப்பல் தீப்பிடித்தது எனவும் சிரியாவின் எண்ணெய் வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, லெபனானில் இருந்து வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவலில், இஸ்ரேலிய விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. குறித்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரேஷன் பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது.
எண்ணெய் பற்றாக்குறை உச்சமடைந்திருக்கும் நிலையில், சிரியா எரிபொருளுக்காக ஈரானை நம்பியிருக்கும் சூழல் உருவானது.
ஆனால் சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகள் தெஹ்ரான் மற்றும் ரஷ்யாவை பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எண்ணெய் அனுப்ப முட்டுக்கட்டையாக உள்ளன.
சிரியா எதிர்கொள்ளும் மிக மோசமான உள்நாட்டு யுத்தத்தின் போது அதன் எண்ணெய் விநியோகம் வீழ்ச்சியடைந்தது, ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் பீப்பாய்களின் எண்ணிக்கை யுத்தத்திற்கு முன்பு 400,000 இலிருந்து கடந்த ஆண்டு வெறும் 89,000 ஆக சரிந்தது குறிப்பிடத்தக்கது.