யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் தாக்கல் செய்த இடமாற்ற மனுவில் ,சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோரை இடைபுகு மனுதாரர்களாக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இடமாற்ற மனு மீதான ஆட்சேபனையை மே மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் கோப்பிலிடுமாறு, இடைபுகு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோருக்கு மன்று அறிவுறுத்தல் வழங்கியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வருடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டசம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் இடம்பெற்று வருகின்றது.
சந்தேகநபர்களான 5 பொலிஸாரும், தமது வழக்கை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு இடமாற்றுமாறு கோரி, தனித்தனியே இடமாற்ற மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருவதால், சட்டத்தரணிகள் எவரும் எமக்காக முன்னிலையாக வருகின்றார்கள் இல்லை.
பாதுகாப்பைக் காரணம் காண்பித்து கொழும்பிலிருந்து சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்துக்கு வர மறுக்கிறார்கள்.
எனவே, எம் மீதான குற்றச்சாட்டு வழக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு இடமாற்ற வேண்டும்” என்று 5 பொலிஸாரும் இடமாற்ற மனுவில் கோரியுள்ளனர்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சுலக்ஸனின் தந்தையார் சி.விஜயகுமார், இந்த வழக்கில் தம்மையும் இடைபுகு மனுதாரராக ஏற்றுகுமாறு, சட்டத்தரணி மொகான் பாலேந்திராவின் அறிவுறுத்தலில், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கே.சயந்தன் ஊடாக விண்ணப்பம் செய்திருந்தார்.
“பாதிக்கப்பட்ட இரண்டு பேர் சார்பிலும் அந்த விண்ணப்பத்தைச் செய்கின்றோம்” என்று மன்றில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மன்று அதனை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், ஆட்சேபணைகளை மே மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் கோப்பிடுமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு மன்று அறிவுறுத்தியது.