திருமண வயதை அடைந்தும் திருமணம் செய்து கொள்ள வசதியின்றியுள்ள 40 பேருக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்திற்கு பொருத்தமானவர்களை விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த திட்டம், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சைவ முன்னேற்றச் சங்கம் உருவாக்கத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் மேற்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பதாரிகள், தமது பொருளாதார நிலையை உறுதிப்படுத்தும் விதமாகக் கிராம சேவகர் அல்லது உதவி அரசாங்க அதிபரிடமிருந்து பெற்ற உறுதிப்படுத்தல் கடிதத்துடன் கிராமத்திலுள்ள ஆலயத் தலைமை நிர்வாகம் அல்லது தலைமைக் குருக்களிடமிருந்து மணமக்கள் பற்றிய முழுவிபரங்களையும் உறுதிப்படுத்தும் கடிதத்தினையும் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், மணமகன் அல்லது மணமகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்தால் அவை தொடர்பான விபரங்களையும் குறிப்பிட்டு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னதாக ‘அகில இலங்கை இந்து மாமன்றம்’, 915, சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை, கொழும்பு – 02 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சைவமுன்னேற்றச் சங்கம் கேட்டுள்ளது.