போர்ச் சூழலில் தத்தளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் யுத்தத்தைவிடவும் கொலையும் தற்கொலையுமே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
ஈரான், சிரியா, ஏமன் உள்ளிட்ட கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்து 22 நாடுகளில் கொலை மற்றும் தற்கொலையால் 1.4 மில்லியன் உயிரிழ்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையால் தெரிய வந்துள்ளது.
குறித்த 22 நாடுகளில் உள்ள ஒட்டு மொத்த 600 மில்லியன் மக்கட்தொகையில், போரினால் இதே காலகட்டத்தில் 144,000 உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது.
மட்டுமின்றி கடந்த 25 ஆண்டுகளில் 100 விழுக்கடு தற்கொலையும் 152 விழுக்காடு படுகொலையும் அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எஞ்சிய ஒட்டுமொத்த உலக நாடுகளை ஒப்பிடுகையில் தற்கொலை எண்ணிக்கை 19 விழுக்காடும் 12 விழுக்காடு படுகொலை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பெருகும் வன்முறை கலாச்சாரத்தால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஒரு தலைமுறையையே இழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நகர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளை தற்போதுள்ள போர்ச் சூழலில் இருந்து மீட்டெடுத்து ஸ்திரத்தன்மை கொண்ட பிரதேசமாக உருமாற்றாமல் விட்டால் எதிர்காலம் என்பது இல்லாமல் போகும் எனவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி குறித்த 22 நாடுகளில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய நிலையிலும் பெருமளவு மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மன அழுத்தம், கோபம், உளவியல் கோளாறுகள் என பரவலாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஏமன் நாட்டை பொறுத்த மட்டில் கடந்த 2 ஆண்டுகளாக போர், பஞ்சம் மற்றும் காலரா நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.