பெண்கள் ஆபாசமாக வீதியில் சென்றாலும் ஆண்கள் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும், ஆண்கள் தங்கள் மனதை சரியானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
பெண் பிள்ளைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருவதன் அத்தியாவசியம் குறித்து விழிப்புணர்வூட்டம் நிகழ்வில் கலந்துகொண்டபோதே குமார் சங்கக்கார இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் கலந்துகொண்டார். இதில் உரையாற்றிய மஹேல ஜயவர்தன,
‘பெண்கள் அணியும் ஆடையில் ஏன் குறை காணவேண்டும்? புற தோற்றத்தினால் யாரையும் கணிப்பிடக்கூடாது. அகத்தோற்றத்தைப் பார்க்க வேண்டும். நல்ல உதாரணமாக லசித் மாலிங்கவைப் பார்க்கலாம். லசித் மாலிங்க கம்மல் அணிந்து, தலை மயிருக்கு வர்ணம் அடித்திருந்தார் என்பதற்காக அவர் குண்டரோ, சண்டியரோ அல்ல. ஒருவர் அணிவது அவருக்குரிய தனிப்பட்ட விருப்பம். அதற்கான உரிமையை அவருக்கு நாங்கள் வழங்க வேண்டும்” என மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார,
”பெண் ஒருவர் நிர்வாணமாக வீதியில் சென்றாலும், ஆண் என்ற ரீதியில் மனதை சிறந்த எண்ணத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இது பெண்களின் தவறு எனக் கூறுகின்றனர். அந்தப் பெண் இப்படி அணிகிறார், அந்தப் பெண் இப்படி பார்க்கிறார்.
என்று ஆண்கள் செய்யும் தவறுக்குக்கான காரணத்தைக் கூறுகின்றனர். இவற்றைத்தான் நாம் களைய வேண்டும். இவ்வாறான கலந்துரையாடல்களின் மூலம் இந்தப் பிரச்சினைகளைக் களைய முடியும்”என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.