பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இம்ரான் கான் கட்சியின் பிரமுகரான உஸ்மான் டார், பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மீது தாக்கல் செய்த வழக்கில், ஐக்கிய அரபு எமிரேட்டில் பணிபுரிவதற்கான பணி அனுமதிச்சான்றிதழ் வைத்திருப்பதை கடந்த 2013ம் ஆண்டு வேட்புமனுத்தாக்கலின் போதும், வெற்றி பெற்று பிரமாண பத்திரிகை தாக்கல் செய்யும் போது சமர்பிக்காமல் மறைத்ததற்காக அவர் மீது வழக்கு தொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றவாளி என அறிவித்து வாழ்நாள் தகுதி நீக்கம் செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே, பனாமா லீக்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு நிதியமைச்ச்சர் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கவாஜா ஆசிப்பின் வழக்கின் தீர்ப்பும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து கவாஜா ஆசிப், தான் குற்றமற்றவர் எனவும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.