உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அமைச்சர்கள் மீது வெங்காயத்தை வீசுங்கள் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக பேசி கூறியுள்ளார்.
மராட்டியத்தில் விலை வீழ்ச்சியால் வெங்காய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் விவசாயி ஒருவர் வெங்காயம் விற்றதில் குறைவான பணம் கிடைத்ததால், அந்த பணத்தை முழுமையாக பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
வெங்காயம் அதிகம் விளையும் நாசிக் மாவட்டத்தில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அப்பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்தார்.
இந்நிலையில், அங்குள்ள கல்வான் பகுதியில் வெங்காய விவசாயிகள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த அவர்,
“உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அமைச்சர்கள் மீது வெங்காயத்தை வீசுங்கள்” என்று கூறி, கடுமையாக பேசினார்.
இக்கருத்தானது தற்போது மக்கள் மத்தியிலும், ஏனைய கட்சிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திள்ளமை குறிப்பிடத்தக்கது.