ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் கொழுந்துவிட்டெரிந்த வாகனத்தினுள் சிக்கி இரு சிறார்கள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் உடல் கருகி பலியான இரு சிறார்களும் சகோதரர்கள் என கூறப்படுகிறது. இதில் ஒருவரது வயது 3 எனவும் இன்னொருவரின் வயது ஒன்றரை எனவும் தெரியவந்துள்ளது.
வாகனம் தீப்பற்றிய நிலையில், பொதுமக்கள் உடனடியாக மாகாண பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளதுடன், தீயணைப்பு துறையிடமும் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.
ஆனால் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரால் சிறார்கள் இருவரையும் மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதில் இரு சிறார்களும் உடல் கருகி பலியாகியுள்ளனர். சம்பவத்தின் போது இருவரின் பெற்றோர்கள் அப்பகுதியில் இல்லை என கூறப்படுகிறது.
வாகனத்தில் பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் செல்ல வேண்டாம் என பொலிசார், இச்சம்பவத்திற்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கொல்லப்பட்ட சிறார்களின் பெற்றோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இறந்த சிறார்கள் இருவரின் புகைப்படம் மற்றும் பெயர்கள் இதுவரை வெளியாகவில்லை.