புதிதாக கண்டுபிக்கப்பட்ட இரண்டு சிலந்திகளில் ஒன்றுக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் பெயருக்கு எப்பொழுதுமே தனிச்சிறப்பு உண்டு. ஆரம்ப காலகட்டத்திலே பெரும் சவால்களுக்கு மத்தியில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்.
அவருடைய சில சாதனைகள் முறியடிக்கப்பட்டு வந்தாலும் கூட, அவர் விளையாடிய காலத்தை தற்போதைய கிரிக்கெட் சூழலுடன் ஒப்பிட முடியாது என்றே முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை வான்கடே மைதானத்தில் முடித்து 6 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்னும் அவர் மீதான ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையாமல் இருந்து வருகிறது.
சச்சின் பல்வேறு வகைகளில் கௌரவிக்கப்பட்டிருந்தாலும், சிலந்திகளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஒரு மாணவர் தனித்துவமான வழியில் பெருமைப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்பதால் ஒரு சிலந்திக்கு ‘மரேங்கோ சச்சின்தெலுல்கர்’ என்று பெயரிட்டேன்.
அதேபோல கேரளாவில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்த ‘புனித குரியகோஸ் எலியாஸ் சவரா’ பெயரை மற்றொரு சிலந்திக்கு சூட்டினேன் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரஜாபதி என்கிற அந்த மாணவர் குஜராத் சுற்றுச்சூழல் கல்வி ஆராய்ச்சி (GEER) அறக்கட்டளையின் இளைய ஆராய்ச்சியாளர் ஆவார். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு இனங்கள், ஆசிய ஜம்பிங் சிலந்திகளின் இந்தோமரெங்கோ மற்றும் மரேங்கோ இனத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்.