இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒவ்வொரு ஆண்டும் மோதும் வகையில் அற்புதமான யோசனை குறித்து ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
கடந்த 2012-2013-ஆம் ஆண்டுக்கு பிறகு, பல்வேறு அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகள் மோதிக் கொள்கின்றன.
பாகிஸ்தான்-இந்தியா அணிகள் மோதும் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்துவது பற்றி ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்துவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச ஆட்டங்களில் அடிக்கடி மோதும் நிலைமை உருவாகும்.
இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் டி20 சூப்பர் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வருடம் அப்போட்டியை நடத்தலாம்.
தனி வருமான முறையில் கிடைக்கும் லாபத்தை சதவீத அடிப்படையில் அனைத்து ஐசிசி உறுப்பினர்களும் பங்கிட்டுக்கொள்ளலாம். இது வெற்றிகரமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த யோசனைக்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி அனுமதி கிடைத்தால் இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.