அரச தலைவர் கூறும் சுபீட்சம் மக்களுக்கானதல்ல அது ராஜபக்ஸ சகோதரர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள ராஜ தோழர்களுக்குமான சுபீட்சம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை மீதான உரை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,
“நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த அரச தலைவர் தனது கொள்கை அறிக்கையில் ஏன் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார் என்பதை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்த்தால் அவர் தனது பழையே கதைகளையே மீண்டும் கூறி சென்றார்.
அவரின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றே இருந்தது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
சமையல் எரிவாயு வரிசை நீண்டுகொண்டே போகிறது. பால்மா வரிசை நகராமல் நிற்கிறது. சீமெந்தின் விலை ஆகாயத்தை தொடுகிறது. அரிசி இப்போது இருநூறு ரூபா இன்னும் சில மாதங்களில் 500 ஐ தாண்டும் என கணிக்கப்படுகிறது.
மரக்கறிகள், மருந்துப்பொருட்கள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு, விலை உயர்வு ஏன் பலாக்காய்க்கு கூட சிறந்த விலையை இந்த அரசாங்கமே பெற்றுக்கொடுத்துள்ளது.
தொடர்ச்சியான மின்சார துண்டிப்பு. இன்னும் சில நாட்களில் கையிருப்பில் உள்ள எரிபொருளும் தீர்ந்துவிட்டால் எரிபொருள் வரிசை ஒன்றையும் எதிர்பார்க்கலாம்.
இப்படி நாடே அதள பாதாளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது அரச தலைவர் சுபீட்சத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.
அரச தலைவர் கூறும் சுபீட்சம் மக்களுக்கானதல்ல அது ராஜபக்ஸ சகோதரர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள ராஜ தோழர்களுக்குமான சுபீட்சம். இந்த பிரச்சினைகளை எல்லாம் எதிர்க்கட்சியான நாம் சுட்டிக்காட்டினால் அரச தலைவர் கோபம் கொள்கிறார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் அவரின் ஆட்சியிலேயே நெல்லை 90 க்கு மேல் வாங்கியதாக கூறினார். 30,000ரூபாவுக்கு யூரியா வாங்கி விவசாயம் செய்ததை அவர் மறந்துவிட்டார் .
90க்கு நெல்லை விற்ற விவசாயி யாரும் அந்த பணத்தில் மாடி கட்டவில்லை . நெல்லை விற்றதும் அவனும் சமையல் எரிவாயு பால்மா வரிசையிலேயே நிற்கிறான் .
இதுதான் இப்போது எமது நாட்டு மக்களின் நிலை. இதை அரச தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். தமது இயலாமையை மறைக்க பலவீனமானவரே குறைகளை சுட்டி காட்டுபவர்களிடம் கோபம் கொள்வார்கள்.
அரச தலைவரால் இந்த இரண்டரை வருடங்களாக முடியவில்லை. அவரின் செயற்பாடுகளை பார்த்தல் எஞ்சிய இரண்டரை வருடத்துக்கும் அவரால் முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.








































