பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொள்வதற்கும் ஆலோசித்து வருவதாக இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
லண்டன் பைனான்சியல் டைம்ஸிடம் அவர் இதனை கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்காக, இலங்கை அனைத்து வழிகளையும் நாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் திட்டம் ஒன்றுக்கு செல்வது குறித்து அரசாங்கம் சிந்திக்கும் என்று ராஜபக்ச கூறியுள்ளார்.
அது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கூறிவந்தது.
அத்துடன் அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்களும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவி பெறுவதை விரும்பவில்லை.
எனினும் இலங்கைக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் குழுத் தலைவர் மசாஹிரோ நோசாக்கி, கடந்த டிசம்பர் மாத இறுதியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








































