நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பகிரங்க விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி பதவி கேட்டார்கள் அதனை பெற்றுக் கொண்டார்கள், ஜனாதிபதியின் அதிகாரம் போதவில்லை என 20ம் திருத்தச் சட்டம் கொண்டு வந்து அதிகாரம் விஸ்தரிக்கப்பட்டது.
பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையென்று கோரப்பட்டது. அதுவும் வழங்கப்பட்டது.
பின்னர் அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்சவை அரசியல் அமைப்பு திருத்தங்களின் மூலம் நிதி அமைச்சராக நியமித்துக் கொண்டனர்.
இதனை விட எதனையும் மக்களினால் கொடுக்க முடியாது. எனினும் இன்னும் நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை. நாட்டு மக்கள் எதிர்ப்பார்ப்பு இழந்து காணப்படுகின்றனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து பகிரங்க விவாதம் ஒன்றை நடத்த நாம் தயார்.
சிவில் அமைப்புக்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒரே இடத்தில் அமரச் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவாதம் ஒன்றை நடத்த தயார் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.








































