இலங்கையில் இருந்து கடத்தல், மற்றும் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாட்டின் பொலிஸ்மா அதிபர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர் கண்காணிப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் இன்று ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத கடத்தல்
கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மண்டபம் பகுதியிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு கடத்தவிருந்த போதைப்பொருட்கள், உரம், மஞ்சள் போன்றவற்றை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டவர்களை கைது செய்த பொலிஸாரை தாம் பாராட்டுவதாக தமிழக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் 824 பேருக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகபட்டினத்தில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பயிற்சியின் ஊடாக கடற்றொழிலாளர் ஒருவர், இந்திய கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்றும் தமிழக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.