கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, பிற்பகல் 02.00 மணி முதல் கூட்டம் நிறைவடையும் வரை நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதியின் நாவல சுற்றுவட்டம் வரையான பகுதியில் (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் பின்வரும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.








































