பல உயிர்களை காவு கொண்ட கிண்ணியா பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே உள்ளதாகவும் இது “இருபதாவது திருத்தத்தின் பாலம்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) தெரிவித்துள்ளார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி கலப்பில் இழுவை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கிண்ணியாவில் நேற்று (04) நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனில் எதிர்கால பார்வை கொண்ட திட்டங்கள் அவசியம், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மிகவும் உணர்திறன் வாய்ந்த தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அது தொடர்பாக கவனம் சலுத்தப்படாத போது பேரிழப்பே ஏற்படும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந் நாட்களில் வடக்கு,கிழக்கில் ”பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம், “ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சித் தொடரின் போதே இந் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








































