இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீடு எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், பி.எஸ்.என்.எல். 5ஜி வெளியீடு பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றன. திட்டமிட்டப்படி அனைத்து பணிகளும் நடைபெறும் பட்சத்தில் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி உள்ளிட்டவை இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைகளை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் 5ஜி சேவைகள் வெளியாக முட்டுக் கட்டையாக இருப்பது ஸ்பெக்ட்ரம் ஏலம் மட்டும் தான். மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான சரியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. முன்னதாக டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.
எதுவாயினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இவை அனைத்தும் அதி வேகமாக நடைபெற்று விடும். இதே நிலை மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் பொருந்தாது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்னமும் தனது பயனர்களுக்கு 4ஜி சேவையை வழங்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனலாம்.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 4ஜி சேவைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே 4ஜி கோர் உருவாக்கி விட்டது. இதனை உருவாக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய டெலிமேடிக்ஸ் வளர்ச்சி மையம், டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.