உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளதாவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான கட்டுப்பணம்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது.வெற்றியோ, தோல்வியோ தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பது எமது கட்சியின் அடிப்படை கொள்கை. இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் களுத்துறை நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட தேர்தல் நடவடிக்கைகளை அநுராதபுர நகரில் இருந்து ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் தாமரை மொட்டுச் சின்னத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் கூட்டணியை அமைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் . இதற்கமைய, பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் பெரும்பாலான அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவு பெற்றுள்ளது.
சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து மீண்டும் புதிய நாமத்தில் அரசியல் கூட்டணி அமைக்கப்படும்” – என்றார்.