புதிய இணைப்பு
இந்தியாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இதனிடையே, தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தெலுங்கானாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். சித்தாந்தத்திற்கு இடையேயான போர் தொடரும் என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா பொதுத் தேர்தல் ஆறு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்துள்ளது பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது, பிரதமர் மோடிக்கு உள்ள ஆதரவைப் பிரதிபலிக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் 166 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 116 இடங்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 54 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தெலங்கானாவில் வெற்றி பெற்றிருந்தாலும் வடக்கு மாநிலங்களில் காங்கிரசின் தோல்வி ராகுல் காந்திக்கு பின்னடைவைத் தந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை (04.12.2023) மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.