உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துக்கு அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தவறினால், சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தயாராகவே உள்ளது என கொழும்பு மறை மாவட்ட அருட் தந்தை சிறில் காமினி கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இதற்கான நீதி இதுவரை கிடைக்காமை குறித்தும், அடுத்த கட்ட முன்னகர்வுகள் குறித்தும் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்,
”எமது இந்த நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை தனது பூரண ஆதரவை வழங்குதாக கூறியுள்ளார்.
இவ்விடயம் குறித்து சர்வதேச சமூகத்துக்கும் வெளிநாட்டில் வாழும் இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் விளக்கமளிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்வேதசத்தின் ஆதரவைப் பெறுவதென்பது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியாக கருதாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கருத வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.யார் ஆட்சியில் இருந்தாலும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுவோம்” என்றார்.








































