ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கிய இந்தியாவிற்கு பொருளாதாரத்தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
400 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்- 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. இதற்கு தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
தற்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. பொதுக்குழு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை அடுத்து இந்தியாவுக்கு எதிராக கருத்துக்கள் வலுத்தன. அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே குடியரசு மற்றும் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்டு லூ, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ள இந்தியா மீது பொருளாதாரத் தடை நடவடிக்கையை பயன்படுத்துவதா? அல்லது விலக்குவதா? என்பது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.








































