காலையில் அமைச்சு மாலை கிடையாது. அமைச்சு பதவிகள் நிரந்தரம் இல்லை. அதனால் அடுத்த அமைச்சு பதவிக்காக மனசாட்சியை மறைக்க முடியாது என முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், நேற்று (03) மாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இருவரையும் அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் இருந்து அரச தலைவர் நீக்கியுள்ளதாக அரச தலைவரது ஊடகப் பிரிவு தெரிவித்ததது.
இந்நிலையில், முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியிருந்தார்.








































