ரஷ்ய விமானமான ஏரோஃப்ளோட் இன்று முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற சர்ச்சை
இலங்கை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏரோஃப்ளோட் தடுத்து வைக்கப்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கொழும்புக்கான விமான சேவையை அந்த நிறுவனம் இடைநிறுத்தியிருந்தது.
இந்த நிலையில் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொஸ்கோவிற்கும் கொழும்பிற்கும் இடையில் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் சேவைகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளது.
விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளின் வருகை
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும், கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள தூதரகம் ஆகியவற்றின் முயற்சிகளை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராட்டியுள்ளார்.
இதேவேளை, பிராந்திய விமான நிறுவனமான அஸூர் எயார் நிறுவனத்திற்கு நவம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து வாரத்திற்கு நான்கு வாடகை விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.