உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தலையிடும் முயற்சிகள் குறித்து தாம் மிகவும் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் வைப்புத்தொகையை ஏற்க வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கடந்த 2023 ஜனவரி 9ஆம் திகதியன்று அறிவுறுத்தலை விடுத்திருந்தார்.
இது தேர்தலில் அரசாங்கத்தின் தலையீட்டை குறிப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடிப்படை உரிமை
ஏற்கனவே இலங்கையின் உயர்நீதிமன்றம், 156 வழக்குகளில் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்துவது என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமை என்பதை சுட்டிக்காட்டியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகார உரிமைகள் ஆகியவை இலங்கை மக்களின் இறையாண்மையின் இரண்டு முக்கிய அம்சங்களாகும், அவை பிரிக்க முடியாதவை என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.