வேலை வாங்கித் தருவதாக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை பெண்கள் சீனர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது குறித்த சம்பவத்தின் பின்னணியில், இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைப் பெண்கள் தலா 5,000 டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இலங்கைப் பெண்கள்
விற்பனை செய்யப்பட்ட சில இலங்கைப் பெண்கள் சீனர்களிடமிருந்து தப்பிச் சென்று தாய்லாந்து பொலிஸாரின் காவலில் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு திரும்பிய இலங்கைப் பெண்கள் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்”நாங்கள் சித்திரவதை செய்யப்பட்டு சீன தொழிற்சாலைகளில் வேலைக்கு வைக்கப்பட்டோம். வெயிலில் நிற்கவைத்து ஓடச் சொல்வார்கள்.
மேலும், மின்சாரத்தால் தாக்கி ஒரு மாதமாக உணவின்றி அறையில் வைத்திருந்தனர். அதுமட்டுமின்றி, எங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு 5000 டொலர்கள் தருமாறு கேட்டு துன்புறுத்தினார்கள்” என்று அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதான கடத்தல் குற்றவாளி
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின்,அம்பலாந்தோட்டை உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் அனுர சேனாரத்னவின் அலுவலகத்திலிருந்து ருவன் பத்திரன என்ற மொழி பெயர்ப்பாளர் பணத்திற்காக பெண்களை கடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 6-ஆம் திகதி அம்பலாந்தோட்டை நீதிமன்றத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட சுற்றிவளைப்பு குழு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர் ருவன் பத்திரன கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் பிரதான கடத்தல் குற்றவாளி என கூறப்படும் அனுர சேனாரத்ன தற்போது வீட்டிலிருந்து காணாமல் போய் தலைமறைவானதால், விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.