ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக்குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்ப பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து எலும்பு மார்பு பகுதி வரை இறங்கி சிக்கிக்கொண்டமையினால் மறுநாள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
இதன்போது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அதற்கு அனுமதிக்காத குடும்ப பெண் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கமரா மூலம் சோதனை மேற்கொண்டபோது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக்குழாயில் குத்தியதினாலேயே குருதி வாந்தி ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் இன்று மேற்கொண்டுள்ளார்.