களுத்துறை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் (09) செனிகம கோவிலுக்கும் ஹிக்கடுவ காவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து பிரதான சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
சந்தேகநபர் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருப்பதாகவும், வாடகை அடிப்படையில் கார் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நேற்று அதிகாலை அப்பகுதிக்கு வருவார் எனவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் பிரகாரம், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் முகவர் போன்று வேடமணிந்து அம்பலாங்கொடை பிரதேசத்திற்கு காரை வழங்குவதற்காக சென்று சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் அவரை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து காரில் ஏற்றிய, சாரதி போன்று உடையணிந்த காவல்துறை உத்தியோகத்தர் சந்தேகநபரை கவனமாக சேனிகம கோவிலுக்கும் ஹிக்கடுவ காவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
95,000 ரூபா பணம்
இதன்போது விரைந்து செயற்பட்ட களுத்துறை தெற்கு காவல்துறை குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 95,000 ரூபா பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் களுத்துறை தெற்கு காவல்துறையினரிடம் அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணின் காதலன் ஊடாக குறித்த பாடசாலை மாணவியை தாம் அடையாளம் கண்டதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் தாம் குறித்த மாணவியை சந்தித்ததில்லை எனவும், அவருடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்
கடந்த சனிக்கிழமை தாம் உட்பட நால்வரும் குறித்த விடுதிக்கு சென்று மது அருந்தியதாகவும் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏனைய தம்பதியினர் விடுதியை விட்டு வெளியேறிய பின்னர், தானும் மாணவியும் அறையில் இருந்ததாகவும், ஆனால் உடலுறவு கொள்ளவில்லை என்றும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே, மாணவியின் கையடக்கத்தொலைபேசியில் வந்த அழைப்புக்கு, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிலளித்ததாகவும் சந்தேகநபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மாணவி அறையின் ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துக்கொண்டமையினால், பயந்து அந்த இடத்தை விட்டு ஓடியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தப்பிச்சென்று சந்தேகநபர் ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனது விவாகரத்து பெற்ற மனைவியின் வீட்டில் தங்கியிருந்து பின்னர் வேறொரு விடுதிக்கு சென்று சில மணித்தியாலங்கள் தங்கியிருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.