எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
டொலர் கையிருப்பு அதிகரிப்பு மற்றும் ரூபாவின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ருவன்வெல (Ruwanwella) பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதற்கு ஆய்வு நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அத்தியாவசியமான மற்றும் தவிர்க்க முடியாத வாகனங்களின் பட்டியலை அந்த குழு தயாரிக்கும்.
எந்த வகையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், எவ்வளவு காலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும், எத்தனை வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போன்றவற்றை இந்தக் குழு பரிந்துரைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.