இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரனை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் மதுரையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த இருவரையும் ஏறாவூர் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மதுரையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும் அவரின் சகோதரரான 51 வயதுடைய ஆணும் கடந்த ஜுன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








































