முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (22) கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம், சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக பதிவாகியுள்ளது.
லண்டன் பயணம்..
வெளிநாட்டுப் பயணம் ஒன்றின் போது அரசாங்கத்தின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசாரணை நடத்துவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் அதாவது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.
சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, அவர் தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி குறித்த சுற்றுப்பயணத்தின் போது அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அண்மையில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அதற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் அவரின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
அதன் பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அவர் நேற்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் பிற்பகல் 1.15 மணியளவில் குற்றபுலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்த நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி தொடர்பான விசாரணைகள், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
பிணை நிராகரிப்பு..
விசாரணைகளின் போது சட்டத்தரணி திலீப பீரிஸ், வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் கடந்த 2025 மார்ச் 17ஆம் திகதி ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிறகு, 2025 மே 23 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரால் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 9 ஆம் திகதி வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன், நாட்டின் 8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேகநபராகப் பெயரிட்டு கைது செய்ததாக திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை
அது மாத்திரமன்றி, விசாரணை முழுமையடையாததால், ரணில் விக்ரமசிங்கவை காவலில் வைக்குமாறு மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸினால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, சந்தேகநபரின் உடல்நிலை மற்றும் அவரது மனைவியின் உடலநிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் அனுமதிக்குமாறு கோரியதுடன் பல்வேறு காரணங்களையும் முன்வைத்தார்.
அதாவது, ரணில் விக்ரமசிங்க, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர். அத்துடன் அவருடைய மனைவி ஒரு புற்றுநோயாளி என்றும், அவரை கவனித்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலை தவிர வேறு யாரும் இல்லையென்றும் சுட்டிக்காட்டி பிணை வழங்குமாறும் கோரியுள்ளார்.
இருப்பினும், மாலை 5.30 மணியளவில் நீதவான் வழக்கு தொடர்பான உத்தரவை அரை மணித்தியாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதி..
இதனையடுத்து, இரவில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்தார்.
இந்த தீர்ப்பின் போது பிணை வழங்குவதற்கு பாரதூரமான காரணங்களே கவனத்திற் கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட நீதிவான், பிரதிவாதியினது மனைவியின் உடல்நிலை இதற்கான காரணமாக அமையாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ரணிலின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு இணங்க, அவர் லண்டன் பயணத்தின்போது பயன்படுத்திய நிதி அரச நிதியல்ல என்பதை பிரதிவாதி தரப்பு நிரூபிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய நிலையில் நீதிவான் பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.
இதேவேளை இரவு 10 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார்.
அதன்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த அவரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டதுடன் நீதிமன்ற வளாகத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பல அதிகாரிகள் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மிக அதீத பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 12.22 மணியளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.








































