- நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே தடுமாறியது. இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
பிரேஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். எனினும், நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைக்க, ஷுப்மன் கில், விராட் கோலி இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அணியின் ஸ்கோர் 98 ஆக இருந்தபோது விராட் கோலி (11 ரன்) ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய ஷுப்மன் கில் 21வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் 40 ரன்களுடனும், இஷான் கிஷன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி உள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி 24ம் தேதி இந்தூரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.