மஹதீர் மொகமட், புடின் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் செந்தில் கவுண்டமணிகளாக மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசில் ஓரிரு தினங்கள் மின்வெட்டு ஏற்பட்ட போது, ‘முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் எங்கள் ஆட்சியில் பத்து நிமிடமேனும் மின்சாரம் தடைப்படாது’ என மகிந்த ராஜபக்ச கூறினார்.
இன்று ஏழரை மணி நேரம் நாடு இருளில் உள்ளது. 5ஆம் திகதிக்கு பின் மின்வெட்டு இல்லையென ஜனாதிபதி கூறினார். இரண்டு, மூன்று நாட்களில் நிலைமை சீராகும் என புதிய எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.
ஆனால் இன்றுவரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் நிதி அமைச்சர் வீதி மின்விளக்குகளை அணைக்குமாறு கூறுகிறார்.
இவர்களின் பேச்சைக் கேட்டு மக்களைப் போன்று நானும் குழப்பத்தில் உள்ளேன். இந்த வரிசைகள், மின்வெட்டு அனைத்துக்கும் உண்மையான காரணம் டொலர் தட்டுப்பாடே.
எரிபொருள் இல்லை என மக்கள் வீதியில் இறங்கியவுடன் இருக்கும் டொலர்களை கொண்டு எரிபொருள் கொள்வனவு செய்தால் எரிவாயு கொள்வனவு செய்ய டொலர் இல்லை.
உடன் எரிவாயு வரிசை தொடங்கும். இதை சரி செய்ய எரிவாயு கொள்வனவு செய்தால் சீமெந்து, மருந்து பொருட்கள் வாங்கப் பணமில்லை. இதை சரிசெய்யப் போனால் மீண்டும் எரிபொருள் வரிசை என இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
டொலர் தட்டுப்பாட்டால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டீ சில்வா 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் எச்சரித்து இருந்தார்.
அன்று இப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவால் கப்ரால் அவ்வாறு ஏற்படாது என மறுத்திருந்தார். இப்பொழுது நாம் கூறிய அனைத்தும் நடந்தவுடன் கடந்த நல்லாட்சி அரசின் நடவடிக்கையாலேயே டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் கூறுகின்றனர் .
வெட்கமில்லையா? ஆடைகள் அணிந்து கொண்டா இவ்வாறு கூறுகிறார்கள்? 1994 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்களே நாட்டின் ஜனாதிபதியாக இருந்தனர்.
அதிலும் 18 ஆம் 20 ஆம் திருத்தங்கள் எனச் சர்வாதிகாரமும் கொண்ட ஜனாதிபதியாக இருந்து இவர்கள் சிங்கப்பூராக மாற்றிய நாட்டை 2001 ஆம் ஆண்டு இரண்டு வருடங்களும் 2015 இல் நான்கு வருடங்களும் நாடாளுமன்ற அதிகாரத்தைக் கொண்டு நாங்கள் இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம் என இவர்கள் கூறுகிறார்கள்.
வந்தது என்னமோ மஹதீர் மொகமட்,லீ குவான், புடின் என கூறி, ஆனால் இன்று அவர் மாறியிருப்பதோ கவுண்டமணி செந்தில் போன்று” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.








































