நடிகை சமந்தா மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆறுதல் தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘யசோதா’ படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.
இதையடுத்து நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு டப்பிங் பேசியுள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், “சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவருக்காக திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சமந்தா, நம் வாழ்க்கையில் அவ்வப்போது சவால்கள் வந்துகொண்டேயிருக்கும். அவை நம் மனவலிமையை கண்டறிவதற்காகக் கூட இருக்கலாம். மிகப்பெரிய மனவலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள். விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள். தைரியமும், நம்பிக்கையும் கிடைக்க வாழ்த்துகள்”என்று குறிப்பிட்டுள்ளார்.