கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு, மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர், தனது வீட்டிலிருந்து பொரளை பொது மயானத்திற்கு செல்லும் பாதுகாப்பு கமரா காட்சிகளை நிபுணத்துவம் பெற்ற நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சமர்பிப்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, தினேஷ் ஷாப்டரின் மர்மக்கொலையின் விசாரணையில் பாதுகாப்பு கமரா காட்சிகள் மிக முக்கிய ஆதாரமாக மாறியுள்ளதுடன்,பாதுகாப்பு கமரா காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான சில செயற்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சந்தேகம் காணப்படுவதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விஞ்ஞான ரீதியான ஆதாரங்களைப் பெற்று சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உத்தேசித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கைரேகை பணியக அதிகாரிகள், தினேஷ் ஷாப்டரின் காரில் 11 அல்லது அதற்கு மேற்பட்ட கைரேகைகளை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கை ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மர்மக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்ற போதிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்களின்படி, தொலைபேசி வலையமைப்பு பகுப்பாய்வு உள்ளிட்ட மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.