திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (22.05.2023) இடம்பெற்றுள்ளது.
போதைப் பொருள்
திருகோணமலையிலிருந்து- ரொட்டவெவ கிராமத்திற்கு ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு வரும்போது மொரவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மோட்டார் சைக்கிளை சோதனை இடுவதற்காக நிறுத்தியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பயணித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டதுடன் குறித்த இளைஞர்களை சோதனை இட்டபோது இளைஞர் ஒருவரின் மல வாயிலுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் 07 பக்கெட் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை- ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரும், திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கஞ்சா பொருளை விற்பனைக்காக தமது அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 33வயதுடைய பெண்ணொருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும் குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.