டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாக்கிழமை அறிவிக்கவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த மனு தொடர்பான வாதங்களை முன்னர் கேட்டறிந்த நிலையில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2022 நவம்பர் 15 ஆம் திகதி அகற்றுமாறு செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், பொது பாதுகாப்பு அமைச்சர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதாகவும், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், அத்தகைய நபர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அறிவித்து, அதனை இரத்துச் செய்வதற்கான ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் ஓஷல ஹேரத் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.








































