உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திரு.ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரச நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சின் ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்ட பலர் இது தொடர்பான யோசனையை சமர்ப்பித்ததாகவும் இதற்கு, அனைத்து கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தங்களது உடன்பாட்டை தெரிவித்துள்ளதாகவும் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தலை தொடர்ந்தும் தாமதப்படுத்துவது உள்ளூராட்சி மன்றங்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக உள்ளுராட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவ்வாறான பிரேரணையை சமர்ப்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கபடவில்லை என்றும் இது அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மாத்திரமே எனவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.








































