நாடொன்றுக்கு 104 ரோஹிங்கியரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவுக்குத் தப்பிச்செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாகப் பயணித்த போது யாழ். மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்துள்ளனர்.
இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18 ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல் நீடிப்பு
சட்டத்துக்குப் புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களைச் சட்டத்துக்குப் புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
டிசம்பர் 19 ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன், 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே ஜனவரி 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்த போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 104 ரோஹிங்கிய அகதிகளும் மீரிகான தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.