உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவின் தீர்மானத்துக்கு எதிராகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலை நடத்துவதில் சிக்கல்
இந்த நிலையில் வேட்புமனுக்கள் கோரப்பட்டாலும் தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 10 பில்லியன் ரூபாவாகும்.
எனினும் தேர்தலுக்கான மொத்த செலவு 12 பில்லியன் ரூபா என கூறப்படுவதால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாலும் தேர்தல் திகதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், தேவைப்பட்டால் கூடுதல் நிதியை நிதி அமைச்சகம் வழங்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு நெருக்கமான தரப்புக்கள் கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குட்டித்தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படவுள்ளது என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்தே இந்தத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அரசு இந்த யோசனையை முன்வைத்தால், அதற்கு எதிராக தாங்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பிரகாரம், மார்ச் மாதம் 4 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ள நிலையில், ஏதாவது தந்திரோபாயத்தைப் பயன்படுத்தித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக பாரியளவில் இரண்டு கட்டங்களாகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
முதலாம் கட்டப் போராட்டமாக நீதிமன்றம் செல்லுதல். வரலாற்றில் முதல் தடவையாக இதில் அதிக எண்ணிக்கையிலான சட்டத்தரணிகள் ஆஜராவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பாரிய மக்கள் போராட்டம். நாடு பூராகவும் இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.