முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 1979 ஆம் ஆண்டு கொண்டுவந்த தற்காலிக பயங்கரவாத தடுப்புச் சட்டமே ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரச்சினையை தீர்க்கலாம் என்ற சிந்தனையை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விதைத்தது என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் செயற்பாட்டாளர் தரிந்து உடுவரகெதர அது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism (Temporary Provisions) Act, No. 48 of 1979) கொண்டு வந்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் 100 பேரே அயுதம் ஏந்திய குழுக்களாக காணப்பட்டனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
இந்த விடயம் அன்று நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அன்று வடக்கில் ஆயுதம் போராட்டம் தொடர்பில் பெருவாரியான சிந்தனை கோட்டுபாடுகள் இருக்கவில்லை. அது பரப்பப்பட்டிருக்கவும் இல்லை.
ஆனால் ஜே.ஆர். கொண்டு வந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினால் ஆறு மாதங்களில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சக்திவாய்ந்த ஆயுத போராட்டக் குழுவாக மாற்றமடைந்தனர்.
ஏனென்றால் ஆயுதம் ஏந்தி போராடுவதை தவிர பேச்சுவார்த்தையில் உங்களிடம் பிரச்சினையை தீர்க்க முடியாது என்ற எண்ணம் இந்த சட்டமே உருவாக்கியது. அதையே தென் பகுதியில் ஜே.வி.பியும் செய்வதற்கு காரணமானது.
இந்த நாட்டில் எமது பிரச்சினைகளை தீர்ப்பதென்றால் ஆயுதம் ஏந்துவது தான் தீர்வாகும் என்பதை இந்த சட்டம் கேடிட்டு காட்டியுள்ளது.
அதற்கு காரணம், பயங்கரவாத செயற்பாடுகள் அற்ற பல விடயங்களை பயங்கரவாதமாக விளக்கப்படுத்தியதாகும். நாற்பது ஆண்டுகளாக இருக்கும் சட்டத்தையே இந்த அரசும் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








































